Tuesday, July 22, 2014

உடைந்த இரவு

உடைந்த இரவு 
உடைந்த இரவு

பி..கிருஷ்ணமூர்த்தி

       கிழக்கு வானம் சிவந்து உதய சூரியனை வரவேற்க காத்திருந்தது. தேசீய நெடிஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் வாகனங்களின் சத்தம் அந்த விடியலின் நிர்மால்ய அமைதியை கலைத்தது. சாலையின் இரு பக்கங்களிலும் பரவியிருந்த  சில பெட்டிக் கடைகளும் ஒரு மதுபான கடையும் மூடியிருந்தன.. சாலை ஓரத்தில் விடியலின் லேசான குளிர் காற்றில், முந்திய இரவில் அதிகமாக குடித்ததின் போதையில் வேலு அயர்ந்து படுத்திருந்தான். விடியற் காலையில் வேலைக்கும்  செல்லும் ஜன நடமாட்டத்தில் சிலர் அவனை பார்த்தும் பார்க்காதது போல் கடந்து சென்றனர். ஒரு சிலர் மனிதாபிமானத்தில் அவனிடம் நின்று  அவனை எழுப்ப முயன்றதில், வேலு கண்களை திறந்தான். இரவு நன்றாக குடித்துவிட்டு தள்ளாடி அங்கு வந்து விழுந்ததை அவன் நினைத்து பார்த்ததில் அவன் குறுகிப் போனான்.
       வேலுவும் செல்வியும் அன்றாட கூலி வேலை செய்து நெல்லிக் குப்பத்து வாசிகளாக இருக்கும் தம்பதிகள். வேலு ஒரு லாரி கிடங்கில் மூட்டைகளை தூக்கும் கூலி ஆள். செல்வியோ கட்டிட வேலையில்  சித்தாளாக வேலை செய்பவள். இந்த வருமானத்தில் அவர்களுக்கு  அரை வயிற்று கஞ்சிதான்  தினமும் கிடைத்தது. அவர்கள் தம்பதிகளாகி பத்து வருடமாகியும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. மருத்துவ சோதனையில் செல்வி வாழ்நாள் முழுவதும் மலடியாகத்தான் இருப்பாள் என்பது தெரிந்தது. ஆரம்பத்தில் மூட்டைகளை தூக்கியதில் ஏற்பட்ட களைப்பை மறக்க சிறிது குடிக்க  தொடங்கிய வேலு, நாளடைவில் குழந்தை பேறு நிரந்தரமாக இல்லாததால் குடிபோதைக்கு அடிமையானான். தன் மலடித்தனாத்தால் இந்த நிலைக்கு அவன் ஆளானான் என்ற குற்ற உணர்ச்சியில் செல்வி அவனை ஆரம்பத்தில்  மாற்ற முயற்சிக்கவில்லை. குடிப்பதில் அவன் சந்தோஷம் அடைந்தால் அது அவனுக்கு தான் செய்யும் பிராயசித்தம் என நினைத்தாள். ஆனால் அது போக போக முழுவதும் அதற்கு அடிமையாகி, அவனை வெறி பிடித்த மிருகமான நாட்களை அவளால் மறக்க முடியவில்லை. ஆண்டவன் தன்னை தாய்மையாகாத குறையுடன்  படைத்ததை நினைத்து அழுத  இரவுகளும், குடித்துவிட்டு போதையில் வெளியே பல இடங்களில் அவன் விழுந்த கிடந்த இரவுகளும்  அவள் வாழ்வில் எத்தனையோ!
       அது தீபாவளிக்கு முந்திய இரவு. குப்பத்து குழைந்தைகள் கூட்டமாக, பட்டாசு, புஸ்வாணம் போன்ற வாண வேடிக்கைகளையுடன் கொண்டாடி கொண்டிருந்தனர். இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த செல்விக்கு திடீரென்று கூலி வேலை முடிந்து வேலு சீக்கிரமே வீட்டிற்கு வரும்  காட்சி வியப்பாக இருந்தது. மேலும் அவன் கையில் பைகளுடன் ஆர்வமாக. போதையில் இல்லாமல்  நிதானமாக நடந்து வந்தது. “என்ன செல்வி முழுச்சு பார்க்கிறே? தீபாவளிக்கு லாரி கிடங்கிலே கொஞ்சம் பணம் கொடுத்தாங்க. ரொம்ப நாளா உனக்கு சேலை வாங்கணும்ன்னு எனக்கு அம்புட்டு ஆசை. இன்னைக்கு வாங்கிட்டு வந்துட்டேன்” என்று  செல்வியின் மெளனத்தை கலைத்தான். மனதின் எதிரொலியாக  மெளன மொழியில் செல்வி ஆண்டவனை வேண்டி கொண்டாள். கையில் காசு இல்லாத நிலையிலும் திருடியாவது, அல்லது கெஞ்சி பிச்சை எடுத்தாவது தன் குடி வெறியை தணிக்கும் வேலு, இப்போ வசதியாக காசு கையிலே   கிடைச்சும், குடியை நாடாமல், வீட்டை நாடி பரிசுகளுடன் வந்தது கனவாக  இருக்க கூடாதே என்று தான்.  வேலு செல்வியின் தோள்மேல் கை போட்டு  குடுசைக்குள் கூட்டி சென்றான். கண்கள் சிவக்க போதையில்லாமல் இப்படி வேலு நிதானத்துடன் தன்னுடன் இருக்கும் அந்த சில நிமிடங்களை நிரந்தரமாக்க, கால சக்கரத்தை நிறுத்த முடியாதா என்று வேண்டினாள். அப்பொழுதும் தாயாகத  அவளின் குற்ற உடல் குறுகி கண்களில் கண்ணீராக நின்றது.
       “ஏய்! புள்ளே! இந்த சேலை உனக்கு புடிச்சிருக்கா?  வரும்  வழியிலே ஒரு துணிக் கடையிலே அழகா ஒரு பொம்மைக்கு கட்டி நிறுத்தி இருந்தாங்க. அந்த பொம்மையிலே உன்னை பார்த்தேன். அதே மாதிரி புடவையை அங்கேயே வாங்கிட்டேன். நமக்கு கண்ணாலம் ஆகி எத்தன வருஷம் ஆச்சு. இது தான் முதல் தபா உனக்கு சேலை வாங்கியாந்துருக்கேன்.  எப்படி இருக்குன்னு  சொல்லு புள்ளே?” இந்த வார்தைகளில் சில நிமிஷம் செல்வி உலக்த்தையே மறந்தாள். வேலு செல்வியின் பதிலுக்கு காத்திருந்தான். “எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. அந்த சுவோப்பு கலர்தான் என்க்கு பிடிக்கும்ன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்றாள். பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியாது முழித்தான். பேச்சை மாற்றி “ஆமா. உங்க முதலாளி பண்டிகைக்கு பணம் எதுவும் தனியா கொடுக்கல்லையா?” என்றான் வேலு.  “கொடுத்தாங்க. ஆனா நீ எங்கே குடிச்சுட்டு வழக்கம் போல வர்ரயோன்னு நினைச்சி நான் வாங்கிட்டு வந்ததை காமிக்கலை இப்போ எடுத்துட்டு வாரேன்.” என்று குடிசையின் ஒரு மூலையிலிருந்து எடுத்து வந்து அவனிடம்  கொடுத்தாள் செல்வி. ஒரு வேஷ்டியும் சட்டையும் அதில் இருந்ததை பார்த்து “நீயும் ஞாபகமா எனக்கும் புது துணி வாங்கியிருக்கே” என்றான். 
       வெளியிலிருந்து கேட்ட அலறல் அவர்களின் உரையாடலுக்கு தடை போட்டது. உடனே இருவரும் வெளியே வந்தனர். அவர்கள் பார்த்த காட்சியில் இருவரும் கதி கலங்கி போயினர். எதிரே ஒரு குடிசையில் தீ பிடித்து நன்றாக எரிந்து கொண்டிருந்தது. குப்பத்து ஜனங்கள் கூட்டமாக எரியும் தீயை அணைக்க முயன்று கொண்டிருந்தனர். குடிசையின் சொந்தக்காரி செண்பகம் “அய்யோ என் குழந்தை உள்ளே மாட்டிகிடுச்சே. யாராவது காப்பாதுங்களேன்” என்று அலறி கொண்டிருந்தாள். தீயின் ஜ்வாலையை பார்த்து ஒருவரும் கூட்டத்தில் உள்ளே இருக்கும் குழந்தையை காப்பாற்ற முன் வரவில்லை. இதை பார்த்து கொண்டிருந்த வேலு, வேகமாக எரியும் குடிசைக்குள் சென்று சில நிமிட போராட்டத்திற்கு பிறகு அந்த மூன்று வயது குழந்தையுடன் வெளியே வந்தான். அவன் முகமும் குழந்தையின் முகமும் தீயின் அனலில் கருத்து போயிருந்தன. குப்பத்து கூட்டமே வேலுவை இதற்கு பாராட்டு சொல்ல,  செண்பகம் வேலுவின் கால்களில் விழுந்து இதற்கு நன்றி சொன்னாள். செல்வி மாத்திரம் பதறிபோய் வேலுவை கட்டிப்பிடித்து குடிசைக்குள் கூட்டிச் சென்று அவன் காயங்களுக்கு மருந்து போட்டாள். “உனக்கு எதாவது ஆயிருந்தா?’ என்று தன் ஆதங்கத்தை வெளிபடுத்தினாள். “செல்வி! ஒரு சின்ன குழந்தை தீயில் மாட்டிகிட்டு திணறும் போது நம்ம உசிரா பெருசு. என்ன பாவம் பண்ணினோமோ நமக்குதான் குழந்தை பாக்கியம் கொடுத்து வைக்கல்லை.  செண்பகத்து குழந்தையையாவது காப்பாத்தி அந்த பாவத்துக்கு கொஞ்சமாவது பிராயசித்தம் தேடலாம்” வேலுவின் இப்படிபட்ட அடி மனதிலிருந்து வெளி வந்த  விரக்தியின் பிரதிபலிப்பு செல்வியின் குற்ற உணர்ச்சியை மேலும் தூண்டியது.
       மனித குலத்தின் மனநிலையில் பல்வேறு முகங்கள் உண்டு. சமய சந்தர்பங்களின் நிர்பந்தங்களுக்கு வளைந்து கொடுத்து தங்கள் உண்மை முகங்களுக்கு திரை போடுபவர்கள் பலர். எந்த சூழ்நிலையிலும் மாறாது ஒரே மனநிலையை கொண்ட மகான்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். விதி வசத்தால் ஏற்படும் ஒரு தனி நபரின் வாழ்க்கையின் ஏமாற்றத்தை அவர் மனம் புண்பட,  கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் குத்தி காட்டுவது பலரின் மனநிலையாக அன்றாடம் காண்கிறோம். அப்படி தாக்கபட்ட அந்த நபரின் மனநிலை, அந்த ஏமாற்றத்தை மறக்க, பல போதை பொருள்களை நாடுவதம்,   அதனால்  தன்னை  சீண்டியவனை வன்முறையில் தாக்குவதும், அன்றாட காட்சிகளாக இருக்கின்றன. அன்பும் பாசமும் அந்த மனதின் அடித்தளத்தில் ஆழமாக இருந்தாலும், மற்றவர்கள் தன் ஏமாற்றத்தை சுட்டி காட்டு விமர்சிக்கும் பொழுது, அன்பும் பாசமும் மறைந்து வன்முறை மனநிலை கொடூர உருவம் எடுக்கிறது.  
       வேலுவும் இப்படிபட்ட மனநிலைகளின் கதாநாயகன். செல்வியின் குறையினால் தன் வாழ்க்கையில் ஒரு வாரிசு இல்லாமல் போய்விட்டதே என்று ஏக்கப்பட்டாலும், குடிக்கும் இடங்களில் போதையில் ஏற்படும் வாக்கு வாதாங்களில் அவன் ஆண்மையை மற்றவர்கள் குத்தி காட்டும் பொழுதெல்லாம், வேலு வன்முறையை நாடினான். இது அவனின் ஒரு மனநிலை. அவனுக்கு வாரிசு இல்லாதது அவனால் அல்ல என்று தெரிந்தும், செல்வியிடம் அவன் அன்புடனும் பாசத்துடனும் இருந்தான். மற்றவர்கள் செல்வியை தள்ளி வைத்து விட்டு வேறு திருமணம் செய்து கொள்ளும்படி கூறும் பொழுதெல்லாம் அதற்கு மறுத்து விடுவான். செல்வியிடம் குறை இல்லாமல்,  அவனிடமிருந்தால்  செல்வியை மறுமணம் செய்து கொள்ள இந்த சமுதாயம் அனுமதிக்குமா என்று வாதாடுவான். இந்த மனநிலையில் அவன் செல்வியை என்றுமே வெறுத்ததில்லை.  ஆனால் ஏமாற்றத்தை மறக்கவும் வேலையின் களைப்பிலும் அவன்  குடிக்கு அடிமையானான். இது நாளைடைவில் அன்றாட பழக்காமகி, அதற்கான வசதியில்லாத போதும் கூட மற்றவரிடம் கையேந்தும் அளவிற்கு கொண்டு சென்றது. வீட்டிலும் தன் அன்பான மனைவி சேர்த்து வைத்திருக்கும் நகைகளையும் சிறு சேமிப்பையும் அவளை கட்டாயபடுத்தி வாங்கி குடிக்கே செலவு செய்தான். அது அவன் மனநிலையின் மற்றொரு முகம். வாரிசை கொடுக்க இயலாமைக்கு பிராயசித்தம் தேடி, செல்வியும் அவனுடைய அவன் மனநிலையை பொருமையுடன் ஏற்றுக் கொண்டாள். அப்பொழுதும் இருவரும் ஒருவரை ஒருவரை விட்டு வாழ விரும்பவில்லை. காரணம் அடித்தளத்தில் ஆழமாக அவர்களிடம்  பதிந்திருக்கும் பரஸ்பர பாசத்தின் விளைவு.தான் அது    
       அன்று ஊரில் விலைவாசி உயர்வால் வேலை நிறுத்தம் காரணமாக லாரிகள் எதுவும் ஒடாததால் வேலுவிற்கு கூலிப்பணம் கிடைக்கவில்லை. குடிப்பழக்கம் மாலை நேரம் தவறாமல் அவனை ஆட்கொள்ள, வேலைக்கு சென்று வீடு திரும்பிய  செல்வியிடம் கேட்க மனமில்லாமல், கடனாகவோ அல்லது பிச்சையாகவோ  பணத்திற்கு அலைந்தான். குடி பழக்கம் அவன் நிலையை புரிந்து கொண்டு அவனை விட்டு விடவா போகிறது? நேரமாக ஆக, அந்த கொடிய பழக்கம் அவனை அதன் வெறியன் ஆக்கி, முடிவில் செல்வியிடமே அவனை தஞ்சம் அடைய வைத்தது.
       குடிசைக்கு வந்த வேலு, செல்வி வீட்டிற்குள் எதோ வேலையாக இருக்க, அவள் வழக்கமாக பணம் வைத்திருக்கும் இடத்தை தேடினான். அங்கு எதுவும் இல்லாததால், குடியின் வெறி அவனிடம் விஸ்வரூம் எடுக்க செல்வியிடம் அதிகாரமாக பணம் கேட்டான். ஆனால் அன்று செல்விக்கும் கூலி கிடைக்காததையும் வீட்டில் வேறு பணம் இல்லாததையும், வேலுவிடம் சொல்லும் போது, அவள் மிகவும் வருந்தினாள். அவன் குடிவெறியை தணிக்க அவளால் உதவ முடியவில்லையே என்று மனதில்  நொந்து போனாள். வேலுவின் கண்கள் குடிசை முழுவதையும் நோட்டம் விட்டு, முடிவில் செல்வியிடம் நின்றது. அவள் கைகள் இரண்டும் எந்த நகையும் இல்லாமல் மூழியாக இருந்தது. கழுத்திலே தங்க தாலியை தவிர எதுவுமே இல்லை. வேலுவின் கண்களுக்கு தன் குடி வெறியை தணிக்க பணத்தை கொடுக்கும் அது வெறும் தங்க நகையாக தெரிந்ததே தவிர, அது அவனுக்கு வாழ்க்கை துணையை தேடி கொடுத்த, பண்பின் புனித அடையாளமாக தெரியவில்லை. அவன் பார்வை தன் கழுத்தில் இருந்த தாலி சரடில் மையமிட்டிருப்பதையும, அவன்  அதற்காக அருகில் ஆவேசமாக வருவதையும் புரிந்து கொண்ட செல்வி, எதற்கும் தன்னை தயார் செய்து கொண்டாள். பக்கத்தில் வந்த வேலு, “எனக்கு பணம் கொடுக்கிறாயா இல்லையா” என்று பயமுறுத்தினான். “எங்கிட்டே பணம் எதுவும் இல்லே” என்ற செல்வி. அவன் அடுத்து என்ன செய்வானோ என்று அச்சத்தோடு காத்திருந்தாள். “உன்னுடைய நகை எதாவது கொடு”  என்ற அவன் கேள்விக்கு, “எல்லாத்தையும் தான் நீ  வித்துட்டியே.. இன்னும் என்ன பாக்கி இருக்கு” என்றாள் செல்வி. ஒரு நிமிட மெளனம் இருவரிடையே நிலவியது. செல்வியின் மிக அருகில் வந்த வேலு, அவளை பார்த்து கொண்டே “வேறே நகை இல்லே” என்று தன் முரட்டு கைகளினால் அவள் கழுத்தில் இருந்த தாலியை பிடித்து இழுக்க முயற்சி செய்தான். “அடப்பாவி மனுஷா! அது நீ கட்டின தாலிடா” என்று தன் இரு கைகளினாலும் தாலியை கெட்டியாக பிடித்து கொண்டு வேலுவை தள்ளினாள். இந்த போராட்டத்தில் அவள் உறுதியாக இருந்தாள். செல்வியின் தள்ளலினால் ஆத்திரபட்டு அவளை வேகமாக பதிலுக்கு கீழே தள்ளி குடிசையை விட்டு வெளியேறினான்.. “டாஸ்மார்கு” கடைக்கு வந்து அவனுக்கு தெரிந்தவனிடம் குடியை வாங்கி குடித்து விட்டு நெடுஞ்சாலையில் விழுந்து கிடந்தான்.   

       மறுநாள் விடியலில் தள்ளாடி கொண்டே எழுந்திருந்த வேலு, செல்வியின் நினைவு வர, தன் குடிசையை பார்த்து நடந்தான். அங்கே குப்பத்து ஜனங்கள் தன் குடிசையின் முன்னே கூட்டமாக இருக்க, அழும் குரல்கள் உள்ளேயிருந்து வர, குழம்பிப் போய் உள்ளே நுழைந்தான். தாய்குலத்தின் கூட்டம் “போயிட்டையா செல்வி” என்று ஒப்பாரி வைத்து கொம்ண்டிருந்தது. வேலுவை பார்த்ததும் “அட பாவி!  செல்வியை கொன்னுட்டையே! அவ உன்மேலே உசிரையே வச்சிருந்தா. இந்த பாவம் ஏழு ஏழு ஜன்மத்துக்கும் உன்னை சும்மா விடாது. . நீ நல்லாவே இருக்கமாட்டே.” என்று சாபம் இட்டனர். இதையெல்லாம் கேட்டுக் கொண்டே வேலு செல்வியின் உடலருகே சென்று பார்த்தான். தலையில் நன்றாக அடிபட்டு, வெளியேறிய இரத்தம், தரையில் உறைந்து கிடந்தது. அவளின் வலது கை பிடி  அவள் கழுத்தில் தொங்கிய தங்க தாலி கெட்டியாக பிடித்து கொண்டிருந்தது. வேலுவிற்கு சில நொடிகளில் நடந்தவை எல்லாம் புரிந்து விட்டது. முந்திய இரவு நடந்த போராட்டத்தில் அவள் உறுதியாக தாலியை அவனுக்கு கொடுக்க மறுத்து அதனால், வெறியில் அவளை கீழே தள்ளியது நினைவுக்கு வந்தது. அவன் தள்ளியதில் பின்னாலிருந்த அம்மி கல் மேல் அவள் விழுந்து, தலையில் பலமாக அடிபட, மயங்கி விழுந்திருக்கிறாள். பிறகு அவளுக்கு என்ன ஆயிற்று என்று கூட பார்க்காமல் வெளியே சென்று விட்டான். செல்வியின் மரணம் முந்திய இரவு வேலு  தள்ளிவிட்டதால் நடந்ததாகவும், குப்பத்திலிருந்த செல்வியின் நெருங்கிய ஒரு தாய்குலம் காவல்துறைக்கு தொலைபேசியில் பூகார் கொடுத்தாள். சிறிது நேரத்தில் வந்த காவல் துறையின் விசாரணையில்,  வேலுதான் செல்வியின் மரணத்திற்கு காரணம் என்ற முடிவில் அவனை காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றனர்.  
       சில மாதங்களுக்கு பிறகு அந்த கொலை வழக்கில், வேலு முரட்டு தானமாக செல்வியிடம் தங்க தாலியை பறிக்கும் போராட்டத்தில், செல்வியை கீழே தள்ள, அவள் அருகிலிருந்த அம்மிக் கல்லின்  மேல் விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தாள் என்றும்,  செல்வியின் மரணத்திற்கு வேலுதான் காரணம் என்று நீதிமன்றத்தில் காவல்துறை வாதாடியது. ஆனால் பிரேத பரிசோதனையின் அறிக்கையில், போராட்டத்தால்  செல்விக்கு நெஞ்சுவலி  வந்து, மயக்கமாக அம்மிக்கல் மேல் விழுந்திருக்கிறாள் என்று கூறப்பட்டிருந்தது.  வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம், சந்தர்ப்ப சாட்சியங்கள் வேலுவை குற்றவாளியாக நிரூபித்திருந்தாலும்  போராட்டத்தின் போது செல்விக்கு  மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமாகி அம்மி கல்லின் மேல் விழுந்து மரணமடைந்தாள் என்றும், மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டதை முக்கியமாக கருத்தில் கொண்டது.  
       மேலும், செல்வியின் மலடி என்ற பிறவி குறையை ஈடிகட்ட, வேலுவின் குடிவெறியை மாற்றவோ அல்லது கட்டுபடுத்தவோ அவள் வாழ்நாளில் முயற்சிக்கவில்லை. அவன் குடி பழக்கத்திற்கு பல சந்தர்பங்களில் தன் நகைகளை கொடுத்தும் உதவியிருக்கிறாள்.  செல்வி மலடி என்று தெரிந்தும், மற்றவர்கள் அவனுக்கு வேறு திருமணம் செய்ய முயற்சித்தும், வேலு செல்வியுடன் சேர்ந்து அன்பாகவும்,  பாசத்துடனும்  வாழ்ந்ததற்கு போதிய ஆதாரங்களும் உள்ளன. அந்த இரவில் அவன் அறியாமல், தற்காலிக வெறியில்  நடந்து கொண்டதில், செல்வியின் மரணம் நடந்தது என்றாலும், அவளிடம் அவனுடைய கடந்த பாச மனநிலைகளையும் இந்த வழக்கில் கருத்தில் எடுத்துக் கொண்டது. குப்பத்து தீ விபத்தில் சிக்கிய குழந்தையை  தனியாக சென்று காப்பாற்றிய நிகழ்ச்சி மூலம் வேலுவின் மனிதாபபிமான மனநில வெளியானதையும்., நீதி மன்றம் கருத்தில் கொண்டது.   மருத்துவ அறிக்கையும்,  சந்தர்ப சாட்சியங்களும் முரணாக இருக்கும் நிலையில், செல்வியின் மரணம் ஒரு விபத்து என்ற முடிவெடுத்தது. ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்க படாவிட்டாலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்க படகூடாது..என்ற சட்டத்தின் நியதியையும் கருத்தில் கொண்டு, வேலு ஒரு நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சாட்சி பொருளான செல்வியின் தாலியையும் வேலுவிடம் திருப்பித் தர உத்தரவிட்டது.  

       விடுதலையாகி வந்த வேலு, தான் நிரபராதியான நிலையை நினைத்து பார்த்தான். கொலை வழக்கில் மருத்துவ அறிக்கை சாதகமாக இருந்ததால், அவனுக்கு விடுதலை கிடைத்தது. இதை அவன் ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதமாக கருதினான்.  திருமணத்திற்கு பிறகு செல்வியின் வேண்டுகோளுக்கு அவன் குடிப்பழக்கத்தை  நிறுத்தியிருந்தாலும், செல்வி பிறவியில் மலடி என்று தெரிந்தபின், அந்த ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் அவன் மறக்கவும், அவளின் குறைபாட்டினால் எங்கே அவளை விட்டு போய்விடுவானோ என்ற சுயநல நோக்கத்தோடும் அவனை மறுபடியும் செல்வி குடிக்கத் தூண்டியிதாலும், வெறும் பழக்கம், வெறியாக நாளடைவில் மாறி,  அந்த இரவில் அவள் மரணத்திற்கே காரணமாக இருந்தது.    

       செல்வியின் இழப்பால், அவன் ஒரு அநாதையானதின்  தாக்கம் அவனை மிகவும் வாட்டியது. தன் பழைய குடிசையை வந்தடைந்தவுடன், சுற்றுமுற்றும் பார்த்து விட்டு உள்ளே நுழைந்தான். அலங்கோலமாக இருந்த வீட்டில், செல்வி விழுந்த மூலையில் அப்படியே இருந்த அந்த உறைந்த ரத்த கறை, வேலுவின் கண்களை குளமாக்கின. கண்களை துடைத்துக் கொண்டே அந்த மூலையை சுத்தப் படுத்தினான். போராட்ட பழைய இரவு நிழலாக தெரிந்து மறைந்தது. அவன் புது வாழ்க்கையை தொடங்க, அவனிடமிருந்த ஒரே சொத்தான செல்வியின் தங்க தாலியை அடகு வைத்து அந்த பணத்தில் வாழ்க்கையை ஆரம்பிக்க முடிவு செய்தான்.  ஒரு அடகு கடைக்கு வந்து. அங்கிருந்த மார்வாடியிடம் தாலியை காட்டி அதை அடகு வைத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்றும் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் என்றும் விசாரித்தான். மார்வாடி வேலுவிடம் அவன் விலாசத்தையும் மற்ற விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு, நகையை எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து, முடிவில் உரசி பார்த்தான். வேலுவை சிறிது நேரம் இருக்கச் சொன்ன மார்வாடி  உள்ளே சென்று திரும்பிய சில நிமிடங்களில் திடீரென்று காவல் துறை ஜீப் ஒன்று கடை வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீஸ்கார்களும் இறங்கினர்.,  வேலு ஒன்றும் புரியாமல் குழம்பியிருந்தான். சில நிமிடங்கள் இன்ஸ்பெக்டர் மார்வாடியிடம் பேசிவிட்டு வேலுவிடம் நகை பற்றி விவரங்கள் கேட்டார். அது இறந்து போன, தன் மனைவியின் தாலி என்றும், அவள் கொலை வழக்கில் தான் நிரபராதியாக முந்திய நாள் விடுதலை ஆனதும், தன்னிடம் பணம் எதுவும் இல்லாததால், தாலியை அடமானம் வைக்க வந்ததாகவும் கூறினான். இது எத்தனை பவுன் என்ற கேள்விக்கு இரண்டு பவுன் என்ற பதில் வர, இன்ஸ்பெக்டர் வேலுவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.. “இது திருட்டு நகை. நேற்று மாலை நெல்லிக் குப்பத்து வழியாக போன ஒரு பெண்ணின் கழுத்திலிருந்து இந்த தாலியை எடுத்திருக்கிறாய். நீ அந்த நெல்லி குப்பத்துவாசிதானே. நீ தான்  திருடி இருக்க வேண்டும்.  ஸ்டேஷனுக்கு போக வண்டியிலே ஏறு”  என்று அலறினார். ஸ்டேஷனில் வன்முறையை பயன்படுத்தி வேலுவை குற்றத்தை ஒத்துக் கொள்ள சொல்லி ஜெயிலில் அடைத்தார்.
      

       சிறையின் கம்பிகளை எண்ணிக்கொண்டே, அவன் செய்யாத தாலித் திருட்டில் குற்றவாளியாக சிறையில் இருப்பதை நினைத்து வேலு பொருமினான். அப்பொழுது அவன் மனச்சாட்சி விஸ்வரூபம் எடுத்து. செல்வியின் மரணத்திற்கு வேலுதான் காரணம் என்று எதிரொலித்தது. அதன் விசாரணையில், சட்டத்தின் வரிகளும், சந்தர்ப்ப சாட்சியங்களும் கைகொடுக்க, கடந்தகால வாழ்க்கையில் அவனுடைய மனிதாபிமான செயல்களும் உதவ, மருத்துவ அறிக்கையும் சேர்ந்து, நீதிமன்ற தீர்ப்பில் நிரபராதி என்றாலும், பராம்பரிய பண்பாட்டின் அடையாளமான செல்வியின் தாலியை பறிப்பதற்கு போராட்டத்தை ஆரம்பித்ததே  வேலுதான்.  செல்வியிடம்  வேலு  வெறியுடன் வன்முறையில்  நடந்து கொண்டதால், அவளுக்கு நெஞ்சு வலி வர, மயக்கமாகி விழுந்து மரணமடைந்தாள். இந்த நிகழ்வுகளையும் ஆராய்ந்து நீதிமன்றம் அவனை தண்டித்திருக்க வேண்டும். அங்கு பெற வேண்டிய தண்டனையை ஈடுகட்ட, விதி, செய்யாத திருட்டு குற்றத்தின் மூலம், அவனை சிறைக்கு அனுப்பி தீர்ப்பளித்தது. .  

Wednesday, January 15, 2014

பிரிவின் பிரதிபலிப்பு




பிரிவின் பிரதிபலிப்பு

பி.கிருஷ்ணமூர்த்தி

 ராமேஸ்வரம் எக்ஸ்பிரெஸ் சரியான நேரத்திற்கு ராமேஸ்வரத்தை வந்தடைந்தது..நானும்  என்   மனைவி அம்புஜமும் ரயில் நிலையத் திலிருந்து  கிளம்பி ஒரு   ஹோட்டலுக்கு வந்து, அங்கிருந்து சிறிது நேரத்தில் ராமநாதஸ்வாமி கோவிலுக்கு சென்று  புரோகிதரை பார்த்து மறுநாள்  எங்கள் ஒரே வாரிசான உத்ராவின் முதலாண்டு  இரங்கலை      சம்பிரதாயப்படி  சடங்குகள்செய்து கொடுக்க பேசினோம்.   புரோகிதரும் அதற்கு ஒப்பு கொண்டு, மறுநாள் மண்டபத்திற்கு       காலை    பத்து மணிக்கு வரச் சொன்னார். சொன்னபடி நாங்கள்    இருவரும் மறுநாள் மண்டபத்துக்கு வந்தடைந்தோம் அதே மண்டபத்தில் மற்றொருவரும் எதோ சடங்குகள் செய்ய அதே புரோகிதருக்கு காத்திருந்தார். “அவர் உங்களுக்கு முன் வந்திருப்பதால் அவரிடம் முடித்துவிட்டு, உங்களிடம் வருகிறேன். அதற்குள் நீங்கள் இருவரும் சமுத்திர ஸ்நானம் செய்து வாருங்கள்” என்றார்.. நானும் அம்புஜமும் கடலுக்கு சென்று குளிக்க ஆரம்பித்தோம். கடலின் அலைகள் போட்டிப் போட்டி கரையில் மோத, சில நிமிடங்களில் நினைவலைகளை என் மனதில் கொண்டு வந்து காட்சியாக அலசியது. 

அம்புஜத்தை கரம் பிடித்து பல வருடங்கள் கழித்து எங்களுக்கு உத்ரா பிறந்தாள். பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பாதுகாப்பதில் நான் மிகவும் அக்கரை கொண்டவன்.. செல்ல குழந்தையாக வளர்ந்த உத்ராவிற்கு கொஞ்சம் கண்டிப்பையும் சேர்த்து ஊட்டினேன். அவள் எங்கே காதல் போன்ற இன்றய முற்போக்கு முறைகளை  பின்பற்றி விடுவாளோ என்பதற்காக கல்லூரி நாட்களில் அவளை மிகவும் கண்காணித்தேன். கல்லூரி படிப்பு  எல்லாவற்றிலும்  அவள் முதலாவதாக வந்தாள். அதை சாட்சியாக வைத்து அவளது கவனம்  வேறு எந்த பருவகால  ஈர்ப்புக்கும் அடிமையாகவில்லை என்று கணக்கு போட்டேன். நான் பாரம்பரிய வழக்கத்திற்கு மாறாக எதையும் செய்யமாட்டேன் என்பதை  நன்றாகவே உத்ரா உணர்ந்திருந்தாள். கல்லூரி படிப்பு முடிந்தவுடனேயே அவளை கல்யாணத்திற்கு பெண் கேட்டு,  நல்ல வேலையில் உள்ள அழகான மாப்பிளைப்  பையனின்  சம்பந்தம் வீடு தேடி வர, குடும்பத்தில் நாங்கள்   கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தோம். உத்ராவும் அந்த மாப்பிள்ளைக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் இருந்ததால், அவளுடய மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டோம்.
        
நிச்சயதார்தம் நடந்து கல்யாண தேதியும் முடிவாயிற்று. திருமண தேதிக்கு மூன்று நாட்கள் முன்னதாக சொந்த பந்தங்கள் எல்லோரும்   வந்திறங்க, வீடே கலகலப்பாக இருந்தது. மறுநாள் காலை வெகு நேரமாகியும் உத்ரா அவள் அறையை விட்டு வெளியே வராததால், அம்புஜம் அவளை எழுப்ப சென்றபோது, “அய்யோ! இங்கே வாங்களேன். நாம மோசம் போய்ட்டோம்” என்று அம்புஜம் அலறி மயக்கத்தில் கீழே சாயந்தாள். எல்லோரும் சென்று பார்த்ததில் உத்ரா தூக்க மாத்திரைகளை  சாப்பிட்டு, வாயில் நுரை தள்ள இறந்து கிடந்தாள். அவள் அருகில் இருந்த கடிதத்தில், “தனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லையென்றும், சகமாணவன் சத்தீஷை அவள் காதலிப்பதாகவும், காதல் கல்யாணத்தை அப்பா கண்டிப்பாக சம்மதிக்க மாட்டார் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்தேன்” என்று எழுதியிருந்தது.
      
  ஈம சடங்குகளை முடித்த நான் மிகவும் நிலைகுலைந்து போயிருந்தேன். என் கண்டிப்பு வளர்ப்புக்கு நான் கொடுத்த விலை என் ஒரே மகள் உத்ராவின் உயிர். இந்த குற்ற உணர்ச்சி   என் உயிர் உள்ளவரை என்னை அன்றாடம் கொல்லும். இன்றய மாறுபட்ட உலகத்தில் இன்னமும் பாரம்பரிய பழக்க வழக்கங்களை பிடிவாதமாக பிடித்து கொண்டு, அவைகளை இன்றய இளைய தலைமுறைகளுக்கு கட்டாய படுத்தும் என்னை போன்ற சுயநலவாதிகளுக்கு நான் கொடுத்த விலை ஒரு பாடமாக இருக்கட்டும். உத்ராவை வெளி உலகம் தெரியாத செல்ல குழைந்தையாகவே  நினைத்து, அவளிடம் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான மனபக்குவம்  இல்லை என்று நான் நினைத்துவிட்டேன். உறவுகளிடம் கல்யாண சம்பந்தத்தை பற்றி கலந்து ஆலோசித்த நான், முக்கியமாக உத்ராவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டேன். காலத்தின் கட்டாயத்தில் எல்லாமே மாறியிருக்கும் போது, பழய பண்பாட்டு முறைகளிலும் நாம் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  
      
  உத்ராவின் மறைவுக்கு பிறகு அம்புஜம் ஒரு நடை பிணமாகவே இருந்தாள். எதிலும் ஈடுபாடு இல்லாமல், யாரிடமும் பேசாமல் எப்பொழுதும் தனிமையை நாடினாள். உத்ராவின் முடிவுக்கு காரணம் நான் என்று என்னை குற்றம் சாட்டினாள். அந்த சமயங்களில் நான் குற்ற உணர்ச்சியில் குறுகி போனேன். காலசக்கரத்தின் வேகத்தில் எது  மறந்தாலும், பெற்றவள் மனதில் புத்திர சோகம் மட்டும் நிரந்தரமாக தங்கிவிடும்.    
       
உத்ராவின் அறையை சரி செய்யும்பொழுது, ஒரு புத்தகத்தின் நடுவில் சத்தீஷின் படம் இருந்ததை பார்த்தேன். சத்தீஷ் மிகவும் அழகாகவும் வசதியானவனுமாக இருந்தான். உத்ராவின் செல் போனில்  அவனும் உத்ராவும் கடைசியாக பேசியது பதிவு ஆகியிருந்தது. உத்ரா, தன் திருமணத்தை நிறுத்தவோ அல்லது அதற்குமுன் சத்தீஷுடன் வீட்டிற்கு தெரியாமல் ஒடிப்போவதையோ அவனிடம் கேட்டபோது, திருமணத்தை அவன் நிச்சயமாக நிறுத்தமுடியாது என்பதையும், அதற்கு பதில், கட்டாயம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக இருவரும் வீட்டிற்கு தெரியாமல் எங்காவது ஒடிப்போக அவன் வேண்டிய ஏற்பாடுகள் செய்வதாயும் கூறியிருந்தது பதிவாகி இருந்தது. உத்ரா அவனை முழுவதும் நம்பி இருப்பதாகவும் இரவு பத்து மணிக்குமேல் எல்லோரும் தூங்க சென்றபின் தன் அறையில் காத்திருப்பதாகவும், சத்தீஷை வாசலில் வந்து  செல்லில் அவளை கூப்பிட்டவுடன் தான் வெளியே வந்து அவனுடன் சேருவதாகவும் உத்ரா சொன்னது பதிவு ஆகியிருந்தது. நடு இரவு ஆனபிறகும் சத்தீஷ் வராததால், பலமுறை அவனை செல்லில் உத்ரா கூப்பிட்டதும்  பதிவாகியிருந்தது. வெகு நேரம் காத்திருந்து அவன் வராமலும், எந்தவித பதிலும் அவனிடமிருந்து இல்லாததால், வேறு  வழி தெரியாமல் பிறகுதான் உத்ரா தூக்க மாத்திரைகளின் உதவியை நாடி இருக்க  வேண்டும். 
        
சத்தீஷின் திட்டபடி உத்திராவை கூட்டி செல்ல ஏன் அவன் வரவில்லை என்ற கேள்விக்கு பதில் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை.  அவன் வீட்டு விலாசமும் எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. உத்ரா இறந்த செய்தி எப்படியும் அவனுக்கு தெரிந்து இருக்கும். சத்தீஷ் வசதி உள்ள குடும்பத்தை சேர்ந்தவனாக இருந்ததால் அவன் பொழுது போக்கிற்காக உத்ராவை காதலிப்பது போல் நடித்து, அது அவளோடு ஒடிப்போகும் நிலைக்கு கொண்டுவிடும் என்று அவன் எதிர் பார்த்திருக்கமாட்டான். இந்த நெருக்கடி நிலையில்  இருந்து தப்பிக்க அன்றிரவு வராமல் ஏமாற்றியிருப்பான். ஆனால் உத்ராவோ அவனை சிறிதும் சந்தேகிக்காமல், அவன் வரும் வழியில்  சாலை விபத்தில் அவனுக்கு எதாவது நடந்து இருக்கவேண்டும் என்று எண்ணினாள். மனதிலே சத்தீஷை நினைத்து கொண்டு, மற்றொருவனுக்கு மனைவியாக மறுநாள் அவள் மணமேடை ஏற விரும்பி இருக்கமாட்டாள். அதன் விளைவுதான் தன் உயிரை முடித்து கொண்டாள்.  இதற்கு மேல் அவள் உயிர் விட்டதற்கு என்னால் எந்தவித காரணத்தையும் நினைத்து பார்க்க முடியவில்லை. 
      நிச்சயதார்தத்திற்கு முன் உத்திராவிடம் மாப்பிள்ளை போட்டோவை கொடுத்து உனக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டதற்கு என் கையில் இருந்த  படத்தை அவள் கையில்கூட வாங்காமல், குனந்து கொண்டே மெளனமாக கல்லூரிக்கு    சென்றுவிட்டாள். அவள் மெளனத்தில் அவள் சொல்ல வந்தது, நான்  பார்த்திருக்கிற மாப்பிள்ளை எல்லோருக்கும் பிடித்திருந்தாலும்  அல்லது மாப்பிள்ளைக்கும்  பெண்ணை மிகவும் பிடித்து ,சீர் சீதனமும் எதுவும் கேட்காததால் அவனையே  நிச்சயமாக்க போகிறோம் என்று முடிவெடுத்தாலும், அதற்கான உத்ராவின் உணர்வுகளின் வெளிப்பாடு மறுபடியும் மெளனம்தான். அதன் உள்நோக்கத்தை  புரிந்திருக்கவேண்டும். பழைய தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையே உரிமைகளின்  வேற்றுமைகளை   அவரஅவர்  நிலையில் நியாப்படுத்த படுகின்றன. நான் வளர்ந்த வாழ்க்கை சூழலும் உத்ரா வளர்ந்த வாழ்க்கை சூழலும் வித்தியாசமாக இருந்ததால்  அது எங்களின்  பாசத்தில் விரிசலை  ஏற்படுத்தியுள்ளது. 
    
இளைய தலைமுறை தான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது என் முடிவு. . பாரம்பரியம் பண்பாடு இவைகளின் அடிப்படையில் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு என்றுமே இடமில்லை என்ற எழுதப்படாத சட்டத்துடன் குடும்பத்தில் நான் சர்வாதிகாரயாக இருந்தேன். அதன் விளைவுதான் எல்லா கேள்விகளுக்கும் உத்ராவின் மெளன மொழியில் பதில்.. பொருளாதார நிலை, அழகு, குடும்ப பின்னணி, ஜாதி, ஜாதகம்  இவைகளின் அடிப்படையில் பெண்ணிற்கு துணையை தேடிய பெற்றோர்களில் நானும் ஒருவன். உத்ராவிற்கும் இவைகளை பார்த்துதான் மாப்பிள்ளையை தேர்ந்து எடுத்தேன். உத்ராவின் மெளனத்தில் அவளுடய எதிர்ப்பை நான் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், என் பழைய நம்பிக்கைகளில் இருந்து என்னால் மாறுபட முடியவில்லை.  என்னிடமுள்ள அளவு கடந்த பாசத்தாலும் மரியாதையாலும் தன் காதலை என்னிடம் வெளிப்படுத்த முடியாமல் உத்ராவின் மனதில் பெரிய போராட்டமே நடந்திருக்கும். ஆனால் அதை .அவளிடம் நேராகவே கேட்டால், அதை நான் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக அதை பயன்படுத்தி,  ஆம் என்று பதிலளித்து விடுவாள். அது என்னை சம்மதிக்கும் நிர்பந்த நிலைக்கு தள்ளவிடும் என்று நேராக கேட்க தயங்கினேன். நான் இதுவரை பாதுகாத்த பண்பாட்டு நம்பிக்கைக்கும் என் ஆண்வர்க ஆணவத்திற்கும் அது ஒரு சவாலாகிவிடுமே! சுங்க சொன்னால் நான் ஒரு சூழ்நிலை கைதியானேன். இப்படி உத்ராவின் மரணத்தை பற்றி மனதிலே ஒரு பட்டி மன்றமே நடத்திக் கொண்டிருந்தபோது புரோகிதரின் கூப்பிடும் குரல் கேட்டு திரும்பினேன். கை சைகளின் மூலம் எங்களை அழைப்பதை புரிந்து கொண்டு மண்டபத்திற்கு விரைந்தோம்.
       
அங்கே எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து எங்களுக்காக புரோகிதர் காத்திருந்தார். நாங்கள் வந்தது
 உத்ராவின் முழுப்பெயர்,  நட்சத்திரம், இறந்துபோன அன்று என்ன திதி போன்ற விவரங்களை எங்களிடம் கேட்டு சிரார்த சடங்குகளை ஆரம்பித்து ஒரு மணி நேரத்திற்குள் முடித்து வைத்தார். முடிவில்.  “உங்களுக்கு முன்னால் ஒருவருக்கு இதே மாதிரி சடங்குகளை அவருடைய மனைவிக்கு இங்கு செய்து வைத்தேனே, அந்த மனைவியின் விவரங்களும் உங்கள் பெண்ணின் விவரங்களும் ஒன்றாக இருந்தன. ஆனால் நீங்கள்  சொன்ன முழுப்பெயர் உத்ரா சந்தானம் ஆனால் அவர் சொன்ன முழுப்பெயர் உத்ரா சத்தீஷ்” இந்த வித்தியாசத்தை தவிர மற்ற விவரங்களும் ஒன்றாயிருக்கின்றன” என்றார். சத்தீஷ்  இந்த பெயர் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும். உத்ராவின் கடைசி வரிகளில் எழுதியிருந்த பெயர் அல்லவா அது. அவர் மனைவிக்கு சடங்குகள் செய்ததாக புரோகிதர் சொன்னது என்னை மிகவும் குழப்பியது.  “அவருடைய. திருமணம் எப்பொழுது எங்கே நடந்தது” என்று நான் கேட்பதற்கு முன்  ”திருமணம் ஆகாமல் அவருடைய காதலி  உத்ரா மரணமடைந்ததாலும் சத்தீஷ் உத்ராவை மானசீக மனைவியாக ஏற்றுகொண்டு, அவளுடைய பிரிவு தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு வருட காலமாக இந்த கோவில் மடத்தில் தங்கி சந்நியாசிபோல் இருக்கிறார்.” என்ற புரோகிதரின் விளக்கம் என்னை மிகவும் நெகிழவைத்தது.   இதை கேட்டதும் அம்புஜம் என்னை பார்க்க நானும்  அவளுக்கு எந்த விளக்கமும் கொடுக்க முடியாமல் திகைத்து நின்றேன். இன்றய நாகரீக சமுதாயத்தில் கணவன்-மனைவி தெய்வீக உறவு சீர் குலைந்த நிலையில் இருக்க, தன் காதலி உத்ராவின் அகால மரணத்தில் மனமுடைந்து அவளை மானசீக மனைவியாக சத்தீஷ் ஏற்று கொண்டிருக்கிறான். அவளுக்காக, தன் எதிர்கால வாழ்வுபற்றி சிறிதும் சிந்திக்காமல் இளம் வயதிலேயே  தனிமை  வாழ்வையும்  நாடியிருக்கிறான். அப்படிபட்ட சத்தீஷை பற்றி, நான் எவ்வளவு கீழ்தரமாக முன்பு விமர்சனம் செய்திருக்கிறேன் என்று எண்ணி வெட்கி தலை குனிந்தேன்.
        
அன்றிரவு சத்தீஷ் உத்ராவை கூட்டி செல்ல வராததிற்கு காரணம் பற்றி  அவனிடம் தெரிந்து கொள்ள மிகவும்   ஆவலாக இருந்தேன். அப்படி அவர்கள் திட்டப்படி ஒடிப் போயிருந்தால்   நானும் அதை விதியின் விளையாட்டு என்று மனதில் ஆறுதல் அடைந்திருப்பேன்.  என் ஆண் வர்கத்தின் ஆணவத்திற்கு கிடைத்த ஒரு சவுக்ககடியாக கூட எண்ணியிருப்பேன். அப்படி நடந்திருந்தால்,  என் செல்ல பெண் என்னிடமிருந்து சில காலம் விலகி இருந்தாலும்   காலச்சக்கர ஒட்டத்தில் நானும் அவள் செய்ததை மறந்து மன்னித்து திரும்ப ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால் அவளை என் ஆணவத்தால் சடலமாக்கிய கொடுமைக்கு என்ன பிராயசித்தம் நான் செய்ய முடியும்? 
                       
சடங்குகள் முடித்த நிலையில், அங்கு நடந்த நிகழ்வுகளில் நாங்கள்  மகழ்ச்சியால் திளைத்தோம்..  நானும் என் மனைவியும் சத்தீஷை எங்கள் குடும்ப வாரிசாக கூட்டி செல்ல முடிவு செய்தோம். அம்புஜமும் நானும் புரோகிதரிடம் கேட்டுக் கொண்டபடி, அவர் சத்தீஷை சந்திக்க எங்களை மடத்திற்கு கூட்டிச் சென்றார். அங்கு சத்தீஷ் இல்லததால் புரோகிதர் அங்கிருந்தவரிடம் சத்தீஷை பற்றி விசாரிக்க, அவர் கூறிய விவரங்களை    கேட்டு என் நெஞ்மே வெடித்திடும் போல இருந்தது. அதை கேட்ட அம்புஜமும் மயக்கமாக கீழே சாய்ந்தாள்....

       
சடங்குகளை செய்து விட்டு மறுபடியும் கடலுக்கு  குளிக்க போன சத்தீஷ்,, அங்கே பெரிய அலைகளில் சிக்கி, மீளமுடியாமல், முடிவில் கடலில் மூழ்கி,  சடலமாக  கரை சேர்ந்தான்.  ஆனால் சத்தீஷின் எதிர்பாராத  இந்த மரணம்  எங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது மரணத்தின் மூலம் சத்தீஷ் அவன் மானசீக மனைவி உத்ராவுடன் சேர்ந்தது, ஒருவன் தன் கண்களை விற்று தனக்கு பிடித்த ஒவியத்தை வாங்கிய கதை போலானது. .