Saturday, February 2, 2019


                         

வன்மத்திலும்
மென்மை  

பி கிருஷ்ணமூர்த்தி

தினசரி சுற்றுகளில் வந்த டாக்டர் அமிர்தவல்லி, என்னை பரிசோதித்து விட்டு அன்று மதியமே நான்  வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினாள். அரசாங்க மருத்துவ மனையில் பிரசவ நோயாளியாக ஒரு வாரத்திற்கு முன் வந்த நான், சில நாட்களில், பத்து மாத சுமையை இறக்கி, தாயும் சேயுமாக தனி தனியாக மூச்சு விடும் நிலையில் இன்று பரந்த வெளி உலகில் சஞ்சாரம் செய்யப் போவது     எனக்கு ஒரு  கேள்விக் குறியாக  இருந்தது.  முக்கியமாக, கூட இருக்கும் மிகவும் இளம்     பிஞ்சு பாவ மூட்டையுடன் நான் எப்படி வாழப்போகிறேன். என்ற எண்ணம் என்னை மிகவும் வாட்டியது.   காதல் வெறியுடன் பெற்ற உறவுகளை உதறிவிட்டு விக்ரமின் வார்த்தைகளை வாக்குறிதாகளாக நம்பி, மணமாகாமலே அவனுடன் வாழ்ந்த சில மாதங்களில், நிலை தடுமாறி ஒரு இரவு நான் செய்த தவற்றினால் தாய்மை அடைந்தேன். இதை அறிந்த விக்ரம் என்னிடம் வித்தியாசமாகவும் அலட்சியமாகவும் பழக ஆரநம்பித்தான். வெளிநாட்டில் வேலைக்கு போவதாக சொல்லி என்னை விட்டு போய்விட்டான். பாவ சின்னமாக என்னுள் வளர்ந்த சிசுவை, பாச சுமையாக நினைத்த எனக்கு, சமுதாயத்தில் என் எதிர்காலத்தில் அதனுடன் எப்படி வாழப்போகிறேன் என்ற நினைவில் குழம்பிப் போயிருந்தேன். அப்பொழுதுதான் சிறிது தூரத்திலிருந்த ரயில் நிலையம் என் கண்களில் பட்டது. என் உள் மனதில் என்னுடைய பாவ சுமைக்கு ஏதோ  ஒரு தீர்வு கிடைத்தது போன்ற உணர்வில் ரயில் நிலையம் நோக்கி நடந்தேன். அங்கு காலி ரயில் பெட்டிகளின் வரிசை எனக்கு சாதகமாக நிறுத்தப்பட்டிருந்தன. ஆட்கள் நடமாட்டமும் அங்கில்லாததால்  ஒரு படுக்கும் வசதி கொண்ட பெட்டியின் உள்ளே, நன்றாக தூங்கி கொண்டிருந்த என் பாச சுமையை  படுக்க வைத்தேன். யாரும் பார்க்குமுன்னே, கீழே இறங்கி மறைவாக நின்று சிறிது நேரம் அந்த ரயில் பெட்டியையே பார்த்து கொண்டிருந்தேன். கையிலிருந்த சுமையை இறக்கிவிட்டாலும், மனதில் இருந்து அந்த சுமையை மறக்க முடியவில்லையே!  கண்களில் கண்ணீர் தேங்க, யாரிடம் எப்படி என் குழந்தை சேர்ப்போகிறதோ என்ற ஆவலும் ஆதங்கமும்  மனதை வாட்ட அந்த ரயில் பெட்டியையே பார்த்துக்  கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்க ஆரம்பித்தது. என் உடம்பெல்லாம் வியர்த்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது, நடுத்தர வயதில் ஒருவர் அந்த பெட்டியின் பக்கம் வர, குழ்ந்தையின் அழுகுரல் கேட்டு  உள்ளே எட்டி பார்த்தார். அங்கு யாரும் இல்லததால்,  எங்காவது பக்கத்தில்  சென்று இருப்பார்களோ என்று எண்ணி சில நிமிடங்கள் நின்று பார்த்து விட்டு, முடிவில் குழந்தையை தானே எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.  
பத்துமாதம் சுமந்து அது வெளி உலகத்திற்கு வந்தவுடன், அதனுடன் என் பந்தம் முடிந்தது என்ற முடிவில், ஆண்டவன் அருளால் யாரிடமோ நன்றாக வளரும் என்ற நம்பிக்கையில் மனதை தேற்றிக் கொண்டு, எதிர்கால சுதந்திர சுயநல வாழ்விற்கு வழி என்ன என்று  யோசித்து கொண்டிருந்தேன். எதிரே ஒரு அரசியல் கட்சியின்  மகளிர் ஊர்வலம் என் கண்களில் பட, அவர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கொண்டேன். என் குரல் வளம் நன்றாக இருந்ததால், நான் எழுப்பிய கோஷங்கள் அந்த ஊர்வலத்தின் தலைவியையும் மற்றவர்களின் கவனத்தையும் மிகவும் கவர்ந்தது.  ஊர்வல முடிவில் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவி,  தனியாக என்னை அழைத்து என்னை பற்றிய விவரங்களை கேட்டு என்னை அலுவலகத்திலேயே தங்க அனுமதித்தாள்.  சேர்ந்த சில மாதங்களிலேயே என் பேச்சு திறனுக்காக கட்சியின் பிரச்சார மேடைகளில் என்னை முக்கிய பேச்சாளனாக்கி, கட்சியில்  என்னை ஆய்வாளாராக உயர்த்தினார்கள். என் பேச்சுக்காகவே என் கட்சியின் பிரச்சார கூட்டங்களுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.  மேலும் ஒரு தொகுதியில் இடைக்கால தேர்தலில் கட்சியின் வேட்பாரளாக என்னை நிறுத்தியதில், என்னுடைய சுயநல வாழ்வின் இலட்சியத்தை நெருங்கிவிட்டதாக பெருமிதம் அடைந்தேன். ஆனால் விக்ரமினால்  ஏற்பட்ட ஏமாற்றமும் களங்கமும் நிழலாக என்னை தொடர்ந்தது. சில இரவுகளில் என்  குழந்தையின் நினைவும் என் கண்களை ஈரமாக்கி மனதில் குற்ற உணர்ச்சியை தூண்டியது.

வேட்பாளராக நான் பக்கத்து ஊருக்கு சென்று, வீடு வீடாக என் கட்சிக்கு ஒட்டு கேட்டபோது, ஒரு பெரிய வீட்டில் என்னை அதிர வைத்த சம்பவம் என் தலையில் சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது.   அங்கு நான் சந்தித்த ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்மணி, தன் குழந்தையுடன் தனியாக இருப்பதையும், சுவற்றில் தொங்கிய படத்தில் இருந்தவரை அவள் கணவர். ஷியாம் என்றும், ஒரு சாலை விபத்தில் அவர் இறந்து விட்டதையும் சொல்லி முடித்தாள். என் அதிர்ச்சிக்கு காரணம் அந்த படத்தில் இருந்தது என்னை ஏமாற்றி ஒரு குழந்தையையும்  கொடுத்த அதே விக்ரம், தன் பெயரை மாற்றி கொண்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறான்.  என் உணர்வுகளை வெளிக் காட்டாமல் அங்கிருந்து நகர்ந்தேன். இந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதாக என்னால் மீள முடியாமல் தவித்தேன்.
பருவ உணர்ச்சிகளால் ஈர்க்கபட்டு, பெற்று வளர்த்த பெற்றோரையும் உதறி விட்டு, ஏமாற்றும் ஒரு ஆணிடம் அறியாமையில் அடிமையாகி, அந்த சங்கமத்தின் சின்னமான ஒரு உயிரை,  சமூக நெருக்கடிகளுக்கு பயந்தும், சொந்த எதிர்கால   சுயநல வாழ்க்கை தேவைகளுக்காகவும்  உலகத்திற்கு தாரை வார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். விக்ரம் ஊரிலிருந்து வந்து என்னை முறைப்படி என்றாவது திருமணம் செய்து கொள்வான் என ஆவலுடன் கர்பிணியாய் காத்திருந்த எனக்கு,  பெயர் மாற்றம் செய்து வசதியான ஒரு குடும்பத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து இருக்கிறான் என்பதை நினைக்கும் பொழுது என் நெஞ்சே வெடித்திடும் போல் இருந்தது. அவன் சுயரூபம்  எனக்கு முன்பே தெரிந்திருந்தால் என் சுமையை உலகிற்கு வராமல்  உடனேயே கலைத்திருப்பேன். இதை எண்ணி எண்ணி ஆண் ஆதிக்கதின் மேல் என் மனதில் ஒரு வன்மம் வளர்ந்து, பெண்களின் உரிமைகளுக்கு போராட ஆரம்பித்தேன். என் அரசியல் பிரவேசம் இதற்கு கைகொடுக்க, என் மனதில் வன்மம் ஒரு விஸ்வரூபம் எடுத்தது. என் மேடை பேச்சுக்களிலும்  அது மறைமுகமாக வெளிப்பட்டது.. பல சந்தர்பங்களில் கட்சியின் ஆண்வர்கம் இதை எதிர்த்தாலும், மகளிர் அணித் தலைவி என்ற முறையிலும்   தாய்குலத்தின் ஆதரவும்   எனக்கு பக்கபலமாக இருந்தன. கட்சி உருப்பினர் ஒருவரின் குடும்பத்தில் அவர் மகளின் வாழ்க்கை ஆண் ஆதிக்கத்தினால் கேள்வி குறியானதில் என்னிடம் முறையிட்டார். என் செல்வாக்கை பயன்படுத்தி காவல் துறையின் உதவியுடன் அவள் திரும்பவும் கணவனுடன் வாழ வழி செய்தேன்.  என்னுள் வளர்ந்த அந்த வன்மம், ஆண் ஆத்க்கத்தின்  சிறு தவறுளை கூட மன்னிக்க மறுத்துவிட்டது. வாழ்க்கையில் எவ்வளவு முன்னேறி உயர்ந்தாலும்,  விக்ரம் செய்த  நம்பிக்கை துரோகத்தால் விலை மதிக்க முடியாத என் பெற்றோரின் பந்தத்தை நான் நிரந்தரமாக  இழந்து இருக்கிறேன்.   
அரசியலில் என் கட்சி என்னை ஒரு கல்வி மந்திரி ஆக்கி பொறுப்புகளை  அதிகமாக்கியது. அந்த முறையில் ஒரு நாள் என்னை பாரதியார் கலைக் கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்க  அழைத்தார்கள். நானும் அதை ஏற்றுகொண்டு வருவதாக கூறினேன். ஆண்டு விழாவில் இறை வணக்கம் முடிந்து பேச்சாளர்களுக்கு பிறகு  நானும் பேசிவிட்டு, தொடரப் போகும், கலை நிகழ்ச்சிகளை பார்க்க  என் இருக்கையில் அமர்ந்தேன். நடன நிகழ்ச்சிகளுக்கு பின் பாட்டுப் போட்டி நடந்தது. முதலில் ஒரு பார்வையற்ற மாணவன் பாட வந்தான். அவனை கூட்டி வந்த ஆசிரியர், அவன் பெயர் ராஜு என்று அறிமுகம் செய்தார்.  பின்னர், அவன் பாடிய நல்லதோர் வீணை செய்து என்ற பாரதியார் பாட்டு,  எல்லோரையும்  மெய்மறக்க செய்து, கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவ்வளவு அழகாக பாடினான்.. முடிவில் முதல் பரிசு அவனுக்கு என்ற அறிவிப்பில் கைதட்டி  மகிழாதவர்களே இல்லை. பார்வையற்றவன் என்பதையும்  மீறி, எனக்கு வார்த்தைகளால் விளக்க முடியா ஒரு பந்ததை என்னுள் உணர்ந்தேன். அந்த உணர்வு அவனுக்கு கண் பார்வை பெற எதாவது உதவி செய்ய வேண்டும் என்று  தூண்டியது.  அவனுக்கு பரிசு அளிக்க மேடைக்கு சென்றேன்.  அவனுடன் அந்த ஆசிரியரும் இருந்தார்.. அவரிடம் அவனைப் பற்றிய விவரங்களை கேட்டபொழுது என் தலையே சுற்றியது. அவன் ஒரு அநாதை என்றும், இருபது வருடத்திற்கு முன், பிறந்த குழந்தையாக காலி ரயில் பெட்டி ஒன்றில், யாரோ விட்டு செல்ல, அந்த வழியாக வந்த நான், அதை எடுத்து வளர்த்தேன். ஆனால் அக்குழந்தைக்கு கண் பார்வை பிறவியிலேயே போய்விட்டது. டாக்டர்கள் பார்த்து, கர்பகாலத்தில் தாயானவள் சரியாக குழந்தையை கவனிக்காததாலும் அல்லது பெற்றோரின் குடும்ப “ஜீன்ஸ்” காரணமாகவும்  இது நடந்திருக்காலம், என்று கூறிவிட்டனர்.  இதை கேட்டவுடன் என் மனதில் பெரிய எரிமலை வெடிப்பது போன்ற உணர்வு. என் உணர்வுகளை கட்டுப்படுத்தி மனதிற்குள்ளேயே அழுதேன். 

சில விநாடிகளில், கண் பார்வை இல்லாவிட்டாலும், எங்கோ அவன் ஒரு அநாதை இல்லத்தில் வளர்ந்து வந்ததை நினைத்து என்னேயே தேற்றிகொண்டு அவன் பராமரிபிற்காகவும், அவன் கண் பார்வை பெறுவதற்கு மருத்துவ செலவிற்கும்,,  பையிலிருந்த காசஒலையை எடுத்து, அவன் பெயருக்கு ரூபாய் 50 லட்சம் என்று எழுதி அந்த ஆசிரியரிடம் கொடுத்தேன். ரயில் பெட்டியிலிருந்த  அநாதியான குழந்தையை எடுத்து வளர்த்தற்கும் என் மனமார்ந்த நன்றியை சொன்னேன். அப்பொழுது எனக்கு கிடைத்த மன நிறைவுபோல் என்றும் என் வாழ்நாளில் எனக்கு கிடைத்தில்லை.. என் சுயநல வாழ்விற்காக நான் சுமந்த பாசுமையை ரயில் பெட்டியில் விட்டு வந்த பாவியை ராஜு என்றாவது மன்னிப்பானா என்று என் மனம் ஏங்கியது. என் வளர்ச்சியில் அபரிதமான பரிமாணங்களை அளித்த அந்த ஆண்டவனுக்கு என் மகனை பல வருடங்களுக்கு பிறகு அடையாளம் காட்டியதற்கும் என் கண்களில் கண்ணீருடன் நன்றி சொன்னேன். 

சிறிது நேரம் கழித்து பிறகு என்னை தனியாக கூட்டி சென்று, அவர் கூறிய வார்த்தைகள் என் நெஞ்சில் சரமாரியாக பல கூறான கத்திகள்  குத்துவது போல இருந்தன.. “இந்த உதவி அவனுக்கு தேவைப்படாது. ஒரு வாரமாக அவன் காய்ச்சலில் அவதிபட்டு மோசமாகி,  பிறகு டாக்டர்கள் பரிசோதனையில், அவனுக்கு புற்றுநோய் இருப்பதாகவும் இன்னும் மூன்று மாதமே அவன் உயிர் வாழ்வான் என்றும் கூறினர்., இந்த உதவியை பள்ளியின் புது கட்டிடத்திற்கு அவன் பெயரில் நன்கொடையாக கொடுங்கள் ” என்று  கேட்டுக் கொண்டார்..

என் சுயநல வாழ்விற்காக சுமந்த பந்ததை உதறிவிட்டு வந்தவளுக்கு, ஆண்டவன் கொடுத்த தண்டனை - மரணத்திற்கு காத்திருக்கும் பார்வையற்ற என் மகனை அடையாளம் காட்டி, அவனுக்கு பரிசு கொடுக்க வைத்ததுதான்.  இந்த பந்ததின் கதாநாயகன் விக்ரத்திற்கும் ஆண்டவன் சாலை விபத்தின்  மரணம் மூலம் தண்டித்து விட்டான். என் சுயநல வாழ்வில் நான் அடைந்த பெரிய வெற்றி  எல்லாம் என் குடும்ப வாழ்க்கையில் நான் கண்ட தோல்வியை ஈடு கட்ட முடியாது. இதனால் என் வன்மம் நிறைந்த மனதும் மென்மை ஆகிவிட்டதை உணர்கிறேன்.  .